Wednesday, April 3, 2019

சினிமா இரசனையில் இயக்குனர் மகேந்திரன் பாலு மகேந்திரா உருவாக்கிய மாற்றம்

சினிமா இரசனையில் இயக்குனர் மகேந்திரன் பாலு மகேந்திரா உருவாக்கிய மாற்றம்

அமரர் இயக்குனர் மகேந்திரன்

சின்னவயதில் கொழும்பிலும், பின்னர் யாழ்ப்பாணத்திலுமென‌ சினிமாப் படங்களைத் தியேட்டர்களில் பார்த்துக்கொண்டாடிய ஆரம்ப காலங்களில் ஒரு சண்டைப்பிரியனாக எம்.ஜி.ஆர் இரசிகனாகவிருந்து, பின்னர் பாடசாலை முடிந்து வீட்டுக்கு நடந்து வரும் வேளைகளில் ஒரு தீவிர சிவாஜி இரசிகனின் கிண்டல்களில் இருந்து தப்பிக்க ஒரே இலகுவான வழி நடிப்புப்பிரியனாக மாறிவிடுவதுதான் என்று சிவாஜி இரசிகனாகவும் மாறிவிட்டேன்.

ஆனால் நாங்களும் வளர, தொழில்நுட்பமும் வளர்ந்தபோது தியேட்டர்களில் பார்த்த சினிமாவை, வீடியோப் படக்காட்சிகளென அளவெட்டி, சுற்றுவட்ட கிராமங்களின் மூலைமுடுக்குகள் எங்கிலும் மூன்று ரூபாய்க்கு இரண்டு படங்களென மலிவுவிலையில் பார்த்தவேளைகளில், கறுப்பு வெள்ளை இரஜினியின் ஸ்டைல் இரசிகனாக மாறியிருந்தேன்.

இப்படிச் சகட்டுமேனிக்கு அளவெட்டியிலும், சுற்றுவட்ட கிராமங்களிலும் வீடியோ படக்காட்சிகள் ஓடிக்கொண்டிருந்த தருணத்தில் எங்கள் பால்ய நண்பன், ரீக்கடைக்கார மாரிமுத்தண்ணையின் பேரன் பிரபா, அளவெட்டி ஐயனார் கோவிலுக்கு பக்கத்து வளவில் காட்டவெளிக்கிட்ட படம்தான் 'முள்ளும் மலரும்'. அன்று பின்னேரம் லவுட்ஸ்பீக்கரில் ஊரைச் சுற்றி எனௌன்ஸ் பண்ணிவிட்டு, படம் காட்டவிருந்த இடத்திலிருந்து லவுட்ஸ்பீக்கரில் பாட்டுப்போட்டு எங்களை வருந்தி அழைத்துக் கொண்டிருந்தான். சனமும் அவனின் அழைப்பிற்கு குறைவைக்காமல் வீடியோவில் இரஜினியின் புதுப்படமொன்று பாக்கப்போற‌ புளுகத்திலை எக்கச்சக்கமாக‌ கூடியிருந்தது.

ஆனால் படம் தொடங்கவிருந்த இறுதித் தருணத்தில், வீடியோப் படக்காட்சிகளுக்கு எதிராக‌ இயங்கிய கோஷ்டியொன்று கரண்ட் கம்பிகளுக்கு,  சைக்கிள் செயினை எறிந்து கரண்டைக் கட் பண்ணிவிட்டார்கள். சனமும் 'சரி, அப்ப குடுத்த காசுக்கு அரோகராத்தான்' என்று கவலைப்பட்டு, அரசல் புரசலாக கதைவழிப்பட‌த் தொடங்கியிட்டுது.

ஆனால் எதற்குமே சளையாமல் எங்கடை பால்யநண்பன் பிரபா சரியா உணர்ச்சி வசப்பட்டு, குரல் தளதளக்க‌ "ஒருத்தரும் ஒண்டுக்கும் கவலைப் படாதையுங்கோ, வீட்டையும் போகாதையுங்கோ இண்டைக்கு எப்படியும் உங்களுக்கு நான் படம் காட்டாமல் விடமாட்டன்" என்று கத்திச் சொல்லிவிட்டு அயல் கிராமமான மல்லாகத்திற்குப் போய் மாட்டுவண்டியில் லைற் எஞ்சின் பிடிச்சுக்கொண்டு வந்து, சொன்னமாதிரியே நள்ளிரவில் எங்களுக்கு தன் கைக்காசில் நஷ்டப்பட்டு, விடாப்பிடியாக‌ காட்டிய படம்தான் "முள்ளும் மலரும்".  படம் முடியேக்கை விடியத்தொடங்கியிருந்தது.  அதுபோல எங்கள் இரண்டு, மூன்று மணிநேரக் காத்திருப்பும் வீண்போகாமல் "முள்ளும் மலரும்" தமிழில் ஒரு நல்ல சினிமாவை அடையாளம் காட்டி எங்கள் இரசனையிலும் ஒரு விடியலை ஏற்படுத்தியது. நன்றி பிரபா.

அடுத்தநாள் வாசிகசாலையில், "எடேய் படத்திலை கதை நல்லம், நடிப்பு நல்லம், எல்லாத்தையும் விட பாட்டுக்கள் வித்தியாசமாகவிருந்தது கவனிச்சனிங்களோ அதிலும் 'செந்தாழம் பூவே" சுப்பரடாப்பா" கமெரா சோக்காயிருந்தது, கதை சொன்ன டெக்னிக்  எப்படியடா? இப்படி? என்ற எங்கள் கத்துக்குட்டித்தனமான விமர்சனங்களுக்கூடான வினாக்களுக்கு ஆனந்தவிகடனின் விளக்கமான விமர்சனம் விடையளித்து எங்கள் இரசனையை மேலும் மெருகூட்டி வளர்த்தது. இப்படித்தான் நாங்கள் மகேந்திரனின் டைரக்க்ஷனுக்கும், பாலு மகேந்திராவின் கமெராவுக்கும் இரசிகர்களாகி மொத்தத்தில் நல்ல சினிமாக்களை இரசிக்கத் தொடங்கினோம்.

அமரர் இயக்குனர் மகேந்திரன் மறைந்தாலும் அவர் எங்கள் சினிமா இரசனையில் உருவாக்கிய மாற்றம் அவரை என்றென்றும் எங்கள் நினைவில் வைத்திருக்கும். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.

அன்புடன்
சாதாரணன்.

பிற்குறிப்பு: இப்பதிவு 2014 பெப்பிரவரியில் அமரர் பாலு மகேந்திராவின் மறைவின்போது எழுதிப் பதிவிடப்பட்டது. பதிவின் பொதுமை கருதி இன்று சிறிய திருத்தங்களுடன் மீள்பதிவிட்டுள்ளேன்.

Saturday, February 2, 2019

இன்று சின்னக்காவின் 21வது நினைவு தினம்

அம்பிகை இல்லத்தின் நாயகி 'சின்னக்கா', அமரர் சின்னத்தம்பி நாகேஸ்வரி அவர்களின் 21 வது நினைவு தினம்

        அம்பிகை இல்லத்தின் நாயகி 'சின்னக்கா', அமரர் சின்னத்தம்பி நாகேஸ்வரி
இன்று அம்பிகை இல்லத்தின் நாயகி 'சின்னக்கா', அமரர் சின்னத்தம்பி நாகேஸ்வரி அவர்களின் 21வது நினைவு தினமாகும். சின்னக்கா அம்பிகை இல்லத்தைச் சுற்றியிருந்த வளவுக்குள் இருந்த  வளங்களை, தன் கைவண்ணத்தால் ஒப்பேற்றி பேறாக்கி சிறப்பாக்கி விடும் ஆளுமையுள்ள கைராசிக்காரியாக திகழ்ந்தார். அத்தோடு மட்டுமல்லாமல் எங்களையும், வளர்த்தெடுத்து ஆளாக்கி விட்டார். உலகெங்கும் பரந்து வாழும் சின்னக்காவின் உறவுகள் அனைவர் சார்பாகவும்  நினைவு கூருகின்றோம். 


அன்புடன்
சாதாரணன்

Friday, January 25, 2019

ஆஸ்திரேலிய தின வாழ்த்துக்கள்!!!!

ஆஸ்திரேலிய தின வாழ்த்துக்கள்!!!!

இன்று ஆஸ்திரேலியா தினம் (26/01/2019) ஆகும். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள மக்கள் எல்லோரும் தேசிய ரீதியாகக் வெகு சிறப்பாக ஆஸ்திரேலியா தினத்தைக் கொண்டாடுகின்றனர். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

 Short Short News : Australia Day

இந்த வருடம் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு உத்தியோகபூர்வமாக ஆஸ்திரேலிய அரசினரால் வழங்கப்படும் அதியுயர் விருதான இவ்வருடத்திற்கான ஆஸ்திரேலியன் (Australian of the year) விருதை, தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தைச் சேர்ந்தவரான‌ Dr Richard Harris OAM அவர்களும்,  மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தைச் சேர்ந்தவரான‌ Dr Craig Challen SC OAM அவர்களும் இணைந்து பெற்றுக் கொள்கின்றனர்.


Prime Minister Scott Morrison and Australian of the year Dr Richard Harris OAM and Dr Craig Challen SC OAM


மிகச் சிறந்த முக்குளிப்பு வீரர்களான‌ இவர்கள் இருவரும் கடந்த வருடம் (2018) யூலையில் தாய்லாந்தில் 12 சிறுவர்கள் கொண்ட உதைபந்தாட்டக் குழுவொன்று அவர்களது பயிற்றுவிப்பாளரோடு  சுமார் 10 கி.மீ. நீளமுள்ள, சிக்கலான குகை அமைப்பு ஒன்றுக்கு சாகசப் பயணம் மேற்கொண்டபோது, குகையினுள் ஏற்பட்ட திடீர் மழைவெள்ளத்தால் குகையிலிருந்து வெளிவரமுடியாமல் சிக்கிக் கொண்ட பொழுது, அவர்களை மீட்டெடுத்த சர்வதேச குழுவில் இணைந்து ஆற்றிய தீரமிக்க வீரப் பணிக்காக இந்த விருதைப் பெற்றுக் கொள்கின்றனர்.

இந்த விருது ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் தலைமைத்துவமிக்க கௌரவமான குடிமமக்களிற்கு ஆஸ்திரேலிய தினத்தையொட்டி வருடம் தோறும் வழங்கப்படும் ஆஸ்திரேலியாவின் அதியுயர்வான‌ விருதாகும்.


தெளிவான பளிங்கு நீலக்கடலால் சூழப்பட்ட, அழகான கடற்கரைகளும், தொன்மையான புராதனமிக்க பாறைகளும், மழைவனக்காடுகளும் நிறையப்பெற்ற இயற்கைவளமிக்க ஆஸ்திரேலிய நாட்டின் குடிமகனான நானும் ஆஸ்திரேலிய தினத்தை இன்று விமரிசையாகக் கொண்டாடுகின்றேன்.

எல்லோருக்கும் எனது அன்பு நிறைந்த ஆஸ்திரேலிய தின வாழ்த்துக்கள்!!!!.

அன்புடன்
சாதாரணன்

இப்பதிவு தொடர்பான மேலதிக விபரங்களை பின்வரும் இணைப்புக்களில் ஆங்கிலத்தில் காணலாம்.

ஆஸ்திரேலியா தினவிபரங்கள்

ஆஸ்திரேலியா தின விருதுகள் பற்றிய விபரங்கள்

இவ்வருடத்திற்கான ஆஸ்திரேலியன் விருதைப் பெறும் Dr Richard Harris OAM அவர்களின் விபரங்கள்


இவ்வருடத்திற்கான ஆஸ்திரேலியன் விருதைப் பெறும்  Dr Craig Challen SC OAM அவர்களின் விபரங்கள்



Thursday, January 10, 2019

வெட்டிவேளைகளில் - ஒரு ஜனரஞ்சகப் பதிவு(கள்) - அறிமுகம்

வெட்டிவேளைகளில் - ஒரு ஜனரஞ்சகப் பதிவு(கள்) -  அறிமுகம்

வெட்டிவேளைகளில் - ஒரு ஜனரஞ்சகப் பதிவு
வெட்டிவேளைகளில் - ஒரு ஜனரஞ்சகப் பதிவு

ஊரிலிலும், சேலம், சென்னையிலும்,  இங்கு ஆஸ்திரேலியாவில் இருந்த‌, இருக்கும் நாட்களில் படிக்கும், ஊழியம் செய்யும் நேரங்கள் தவிர்த்து நான் அதிகமாக வாழ்வில் களித்துக் கழித்த இடங்கள் என்றால் வாசிகசாலைகளும், தியேட்டர்களும் தான். அந்தளவிற்கு பத்திரிகைகள், சஞ்சிகைள், கதைப் புத்தகங்கள் வாசித்தலும், சினிமா பார்ததலும் என ஆரம்பித்து அன்றிலிருந்து, தற்போது இணையத்தின் வழியாக‌ இன்றுவரை என்னை முழுமையாக ஊடகங்கள் ஆட்கொண்டு விட்டன என்றுதான் சொல்லவேண்டும்.  இன்னும் சொல்லப்போனால் ஊடகங்களில் செயலாற்ற வேண்டும் என்பது நனவாகவும், கனவாகவும் கடந்த, நிகழ், எதிர் காலங்களில் இருந்து வந்தது, வருகின்றது, வரும்!

இன்றைய தகவற்காலத்தில் (Information Age) இணையம் வழியாக‌, சமூக ஊடகங்கள் வந்துவிட்ட பின்னர் யாருக்குமே ஊடகங்கள் சாத்தியமான வெளியாகிவிட்டதென்பதை இன்றைய சமூகவாழ்வில் நாம் கண்கூடாகக் கண்டுகொண்டிருக்கின்றோம். தவிர எல்லோருடைய வாழ்வுமே சமூக ஊடகங்களுடன் பின்னிப் பிணைந்துவிட்டதென்றே கூறவேண்டும்.  ஆயினும் பொதுவாக பரபரப்புக்கு உட்பட்டு யாரும் சாதாரணமாக ஊடகங்களில் கண்டுகொள்ளும் விடயங்களுக்கு அப்பாற்பட்டு நேர்மறையாகப் புலப்படும் விடயங்களை அவதானிப்பதிலும் தேடுவதிலுமே, இன்றைய நாட்களில் என் வெட்டிவேளைகள் கழிகின்றன‌. சுருக்கமாகச் சொன்னால் என் வெட்டிவேளைகள் எவ்வாறு கழிந்தன‌, கழிகின்றன என்பதை மிகவும் சுருக்கமாகப் பகிர்வதே வெட்டிவேளைகளில்!.

இன்னொருவிதமாகச் சொன்னால் நான் பத்தியெழுத்து மூலமாக ஒரு இடைவெளிக்குப் பின் மீண்டும் வெட்டிவேளைகளில் என் எழுத்துக்களால் உங்களைச் சந்திக்க விழைகின்றேன்.

இதுவரை, என்னதான் பெரிதாக நான் அலட்டிக் கொண்டாலும், வெட்டிவேளைக‌ளில்:  சிறுகச் சிறுக உங்களிடம் என்னை, என் சந்தோசங்களை, என் ஆர்வங்களை வெளிப்படுத்தும் ஒரு சிறிய‌ முயற்சியேயாகும். கைகூடுமா? பொறுத்திருந்து பார்ப்போமே!!

அன்புடன்
சாதாரணன்

Tuesday, January 1, 2019

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்


அன்புடன் எல்லோருக்கும் எனது உளம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

               இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்


 
அன்புடன்
சாதாரணன்